செட்டிநாடு வெள்ளைப் பணியாரம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்

வெள்ளை உளுந்தம் பருப்பு - 1 1/2 மேசைக்கரண்டி

பால் - 1/4 கப்

சீனி - 1 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேவையானப் பொருட்களை தயாராய் எடுத்துக்கொள்ளவும். பொருட்களின் அளவு குறைந்த எண்ணிக்கை பணியாரங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எண்ணிக்கை அதிகம் வேண்டுவோர் எல்லாப் பொருட்களின் அளவையும் ஒரே விகிதத்தில் அதிகரித்துக் கொள்ளவும்.

அரிசி, உளுந்து இரண்டையும் ஒன்றாய் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி சுமார் ஒன்றரை மணிநேரம் ஊற வைக்கவும்.

அரிசி உளுந்து ஊறியதும், அதனுடன் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு அதில் பால் மற்றும் சீனி சேர்த்து கரைத்து 15 நிமிடம் ஃப்ரிஜ்ஜில் வைக்கவும். ஃப்ரிஜ்ஜில் வைத்து செய்தால் மிருதுவாக இருக்கும்.

இப்போது வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சற்று ஏந்தலான கரண்டியால் மாவை எடுத்து எண்ணெயில் நேரடியாக ஊற்றவும். ஊற்றும்போது எண்ணெய் மேலே தெறித்துவிடாத அளவிற்கு எச்சரிக்கையாக ஊற்றவும்.

மாவை ஊற்றியதும் எண்ணெய்யில் பொரிந்து அது பணியாரம்போல் உப்பி வரும்.

உப்பினாற்போல் வந்ததும் அதை ஒரு சாரணி கொண்டு திருப்பி போட்டு வேக விடவும்.

இரண்டு புறமும் வெந்தவுடன் எண்ணெய்யை வடித்து எடுத்துவிடவும். குறிப்பு: சிவக்க விடக்கூடாது.

சுவையான செட்டிநாட்டு வெள்ளைப் பணியாரம் தயார்.

குறிப்புகள்:

இதனை காரச் சட்னி, வெங்காயம் அல்லது தக்காளிச் சட்னி தொட்டுக்கொண்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

இதே அப்பத்தினை சீனிப் பாகில் ஊறவிட்டு இனிப்பாக சாப்பிடலாம்.

அல்லது தேங்காய்ப் பாலில் ஊற வைத்தும் சாப்பிடலாம்.